Sunday, July 2, 2017

சாமியாரின் யோசனை.


புதுசா ஒரு சாமியார் அந்த ஊர் கோயிலுக்கு வருகை தந்திருந்தார். ஊர் மக்களுக்கு ஒரே சந்தோஷம். அவரை எல்லோருக்கும் பிடித்தது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் எங்கிருந்தோ வருவார். கோயில் வெளியில் ஒரு மரத்தடியில் ஒரு துண்டை விரித்து அதன் மேல் உட்காருவார். அதனால் அவரை மரத்தடி சாமியார் என்று எல்லோரும் குறிப்பிட்டனர். அவர் பணத்தையோ வேறு எதையுமோ எதிர்பார்க்கவில்லை. அதிகம் பேசமாட்டார். சீக்கிரமே மக்களுக்கு அவரிடம் மதிப்பும் மரியாதையும் ஏற்பட்டது. அவரைப்பார்க்க மக்கள் ஆவலுடன் வந்தார்கள். தங்கள் பிரச்னைகளை அவர் முன் சொல்வார்கள். அவர் பேசாமல் எங்கேயோ பார்த்துக்கொண்டிருப்பார். சில சமயம் வாய் திறந்து ஏதாவது அறிவுரை சொல்வார்.
ஒரு வெள்ளியன்று வேலுசாமி சாமியாரைப் பார்க்க கியூ வரிசையில் நின்றான். அவனுடைய முறை வந்ததும் சாமியார் முன்பு சென்று பணிவுடன் வணங்கினான். சாமியார் அவனை ஏறிட்டுப்பார்த்தார்.
“ஐயா, உங்களுக்கு பணிவிடை செய்ய ஆசைப்படறேன், நான் ரொம்ப பாவம் செய்துருக்கேன், சாமி. அதுக்கு பரிகாரமா உங்களுக்கு தொண்டு செய்யணும்னு விரும்பறேன் சாமி, என்னை ஏத்துக்குங்க” என்றான் வேலுசாமி.
சாமியார் ஒன்றும் பேசாமல் அவனை பார்த்துக்கொண்டிருந்தார்.
வேலுசாமி விம்மி விம்மி அழ ஆரம்பித்தான்.
“நான் ரொம்ப கெட்டவன். சாமி. என்னை ஏத்துக்குங்க. நான் உங்களுக்கு உதவியா இருக்கேன். உங்க துணிய தொவச்சு போடறேன், சோறு சமைக்கறேன். உங்க கூட எப்பவும் இருந்து எல்லாம் செய்யறேன். வேண்டாம்னு சொல்லிடாதீங்க சாமி!”
சாமியார் அப்பவும் பேசாமல் அவனை பார்த்துக்கொண்டிருந்தார். வேலுசாமி மடை திறந்தாற்போல் தன் கதையை அவரிடம் கொட்டினான்.
 “ சாமி, நான் என்ன செஞ்சேன்னு சொல்றேன் சாமி, என் மனைவிய ஏமாத்திட்டேன். பாவம். அவ. என்னையே நம்பிட்டிருந்தா. ஒரு நாடக நடிகையப் பாத்து மயங்கி என் மனைவிய, உத்தமிங்க அவ, அவள விட்டுட்டு அந்த நடிகையோட போயிட்டேன். சாமி! ஐயோ!”
வேலுசாமி கொஞ்சம் நிறுத்தினான். சாமியார் அவனையே பார்த்துக்கொண்டிருந்தார்.
“வீட்ல இருந்த பணம், என் பெண்டாட்டியோட நகை எல்லாத்தையும் தூக்கிட்டு ....அவளையும் என் சின்ன பாப்பா, என் ஒரு வயசு மகளையும் அம்போன்னு விட்டுட்டு... அந்த மேனாமினுக்கி, அந்த படுபாவி, கழிசடை லீலாதேவியோட ஓடிப்போனேங்க. ஆறே மாசங்க, அந்த பாவி என்னோட எல்லாத்தையும் சுருட்டிக்கிட்டு வேறொத்தனோட ஓடிட்டா. பதினஞ்சு வருஷம் ஆச்சுங்க. என் பெண்டாட்டி, புள்ள, என்ன ஆனாங்களோ, என் பாவத்துக்கு மன்னிப்பே கிடையாதுங்க. என் எஞ்சிய காலம் உங்க கூட இருந்து பரிகாரம் செஞ்சு என் பாவத்த கழுவலாம்னு பார்க்கறேன் .”
சாமியார் வாயைத் திறந்தார்.
“உன் பொண்டாட்டி, குழந்தைக்கு என்ன ஆச்சுன்னு தெரிஞ்சிக்க முயற்சி பண்ணினயா?”
“ஐயோ, சாமி, எனக்கு நெனைக்கவே பயம்மா இருக்கு. அவ எப்படி இருக்காளோ! நிச்சயமா பிச்சைக்காரியா இருப்பா. என்னைப்பாத்தா நிச்சயமா காரித்துப்புவா, சாமி.”
“போ. போய்ப்பாரு. அப்புறம் வா.”
“அவ எங்க இருக்காளோ, நான் எல்லாத்தையும் சுருட்டிட்டு வந்துட்டேன். வீட்டுக்காரன் அவள தொரத்தியிருப்பான். அவ வாடக எப்படி கொடுப்பா?  ஐயோ, நான் பாவி, சாமி!”
வேலுசாமி ஒப்பாரி வைத்தான்.
“எங்க நீ அவள விட்டுடுட்டு போனயோ அங்கேயே போய் பாரு.”
வேலுசாமி தன் ஊருக்கு பஸ்ஸில் சென்று முன்பு தன் மனைவியுடன் வசித்த சிறு ஓட்டு வீட்டுக்கு சென்றான்.  அது இப்போது ஒரு சின்ன ஹோட்டலாக மாறியிருந்ததைப் பார்த்து வியப்படைந்தான். வீட்டின் முன் ஒரு கூரையினாலான பந்தல் போடப்பட்டிருந்தது. அதில் சுமார் இருபது  மேஜைகளும், மடக்கு நாற்காலிகளும் போடப்பட்டிருந்தன. இரவு மணி ஏழு. வியாபாரம் மும்மரமாக இருந்தது. பலர் உட்கார்ந்து டிபன் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். வெங்காய சாம்பாரின் மணம் மூக்கைத் துளைத்தது.
“ஐயோ! செல்லம்! அவளுக்கு என்ன ஆச்சு? அவ எங்கே?”
அவன் சென்று ஒரு மூலையில் இருந்த மேஜையில் அமர்ந்தான். தலையைக்குனிந்து கொண்டிருந்தான்.
ஒரு சர்வர் அவனருகில் வந்து, “உம்,  என்ன வேணும்?” என்றான்.
வேலுசாமிக்கு தன் தோற்றத்தைப் பற்றி அவமானமாக இருந்தது, பழைய உடை, கலைந்த தலைமுடி, சவரம் செய்யாத முகம் இதையெல்லாம் பார்த்து அவனை எதோ பிச்சை கேட்டு வந்திருக்கிறான் என்று அவன் நினைத்தால் வியப்பில்லை.
வேலுசாமி “ஒரு தோசை.” என்றான்.
அந்த சர்வர் பத்து நிமிஷம் கழித்து சூடாக மசாலா தோசை, வெண்பொங்கல் சாம்பார் சட்னி எல்லாம் கொண்டு வந்து வைத்தான்.
நல்ல பசி. வேலுசாமி கிடுகிடு என்று எல்லாவற்றையும் காலி செய்தான். என்ன ருசி! செல்லம் செய்வது போலவே இருக்கே! சர்வர் சுடச்சுட காபி கொண்டு வந்து வைத்தான்.
காபியை ரசித்து குடித்தான். பில்லுக்கு பணம் கொடுக்க தன் சட்டைபையிலிருந்த பழைய பர்ஸை எடுத்தான்.
“இத்தன வருஷம் கழிச்சு இப்போ எதுக்கு வந்திருக்கே?”
திடுக்கிட்டு நிமிர்ந்தான் வேலுசாமி.
கொஞ்சம் பருமனாக, நகைநட்டு, ஜரிகை சேலை, நெற்றியில் பெரிய குங்குமப்பொட்டு. “பளிச்”சென்று ஒரு ஸ்த்ரீ அவன் எதிரே நின்றுகொண்டிருந்தாள்.
“யார் இவ? எங்கேயோ பாத்த மாதிரி தோணுதே! செல்லம்! ஆமா, செல்லமே தான்.”
“கேக்கறேன் இல்ல, எதுக்கு வந்திருக்கே?”
“செல்லம், நீயா? எனக்கு தெரியல்ல. என்னை மன்னிச்சுடு. தெரியாம வந்து சாப்டுட்டேன்.”
“இங்க எப்படி வந்தே? இத்தன வருஷம் கழிச்சு? அவ தான் ரெண்டு மாசத்திலேயே ஓடிப்போயிட்டான்னு கேள்விப்பட்டேன். நான் என்ன கஸ்டம் எல்லாம் பட்டேன்னு தெரியுமா? இந்த ஊர்க்காரங்கள கேளு. சொல்லுவாங்க. அது சரி, இப்ப எதுக்கு வந்தே? உம்... என்ன விஷயம்?”
“அந்த மரத்தடி சாமியார் தான் உனக்கு என்ன ஆச்சுன்னு பாத்துட்டு வான்னாரு. எனக்கு வர பயமாதான் இருந்திச்சு. செல்லம், ஒனக்கு நான் செஞ்ச துரோகத்துக்கு மன்னிப்பே கிடையாது. நா போறேன்”
“வந்தது வந்தே. இந்த ராத்திரி வேளைல போக வேணாம். இங்க ஒரு மூலைல படுத்துக்க. காலையில எந்திரிச்சு போய்க்கோ.”
அவள் போய் விட்டாள். ஹோட்டலும் காலியாகியிருந்தது. பணியாள் ஒரு பாயும் தலையணையும் கொண்டுவந்து கொடுத்தான்.
கொட்டகையிலேயே ஒரு மூலையில் பாயில் படுத்தான்  வேலுசாமி. “நல்ல வேளை, செல்லம் நல்ல நெலமையில் இருக்கா. இனிமே நான் நிம்மதியா போலாம். ஆனா .. உம்.... டிபன் ரொம்ப நல்லா இருந்திச்சு. செல்லத்தோட கை எல்லாத்திலேயும் தெரிஞ்சுது.  சட்னி என்ன ருசி! ஒருவேள செல்லம் இங்கேயே தங்கச்சொன்னா? சுகமா இருக்கலாம். ஆரம்பத்துல கோவமா இருப்பா. போகபோக சரியாயிடும். பாப்பாவ இன்னும் பாக்கல்ல. பாக்க ஆசையா இருக்கு..” இப்படி யோசித்துக்கொண்டே தூங்கிவிட்டான்.
தன் அறையில் மகளுடன் படுத்திருந்த செல்லத்தின் மனமும் யோசனையில் ஈடுபட்டது.
“பாவி! இத்தன வருஷம் கழிச்சு வந்திருக்கான். இந்த நெலமைக்கு வர எத்தன சிரமம் பட்டிருக்கேன்! போகட்டும். போய் தொலையட்டும்.அடிச்சு வெரட்டணும்னு தான் தோணுது. மனுசனாவது திருந்தறாவது.....ஆனா... வீட்ல ஒரு ஆம்பள இருந்தா நல்லாதான் இருக்கும். பாப்பாவுக்கும் அப்பான்னு ஒத்தர் இருந்தா, அவன் எத்தன கேடுகெட்டவனா இருந்தாலும். பாப்பாவுக்கு வயசு பதினாறாகப்போகுது. கல்யாணம் செய்யணும். இங்க ஆளெல்லாம் என்னை ஏமாத்தறாங்க. கண்காணிக்க ஒரு ஆள் வேணும். அவன் இருந்தா எனக்கும் கௌரவமா இருக்கும். ஆனா கொஞ்சம் கூட எடம் குடுக்கக்கூடாது. கண்டிப்பா இருக்கணும்” தீர்மானம் செய்த செல்லம் நிம்மதியாக உறங்கினாள்.
விடியற்காலை. வேலுசாமி திடீரென விழித்துக்கொண்டான். வியர்த்துக்கொட்டியது. என்ன கெட்ட கனவு!
கனவில் அவன் கொட்டகையில் நாற்காலிகளுக்கும் மேஜைகளுக்கும் நடுவில் நின்றுகொண்டிருக்கிறான். வேலைக்காரர்களும் வாடிக்கையாளர்களுக் அவனை ஏசிக்கொண்டிருக்கின்றனர். “அங்க பாருங்க, அவன் தான் வேலுசாமி, கட்டின பெண்டாட்டிய விட்டுட்டு எவளோ ஒருத்தியோட ஓடினவன்! எல்லாத்தையும் சுருட்டிட்டு ஓடின திருடன்! சீச்சீ! மனுசனா இவன்!”
அவனுடைய மனைவியும் மகளும் அவன் முன்னால் கைகளை ஆட்டியபடி அவனை கண்டபடி திட்டிக்கொண்டிருக்கின்றனர்.
வேலுசாமிக்கு கைகால் நடுங்கியது. அங்கு மாட்டியிருந்த கடிகாரத்தில் மணி பார்த்தான். மணி நான்கு.
எழுந்திருந்தான். சட்டையை மாட்டிக்கொண்டான். நல்ல வேளை, யாரும் இன்னும் எழுந்திருக்கவில்லை. பர்ஸிலிருந்து ஒரு நூறு ரூபாய் நோட்டை எடுத்து கல்லாவில் வைத்து அதன் மேல் அங்கிருந்த ஒரு டம்ளரை வைத்தான். பஸ் ஸ்டாண்டை நோக்கி நடந்தான்.


அப்பா!

சப்தம் கேட்டு வேலுசாமி திரும்பி பார்த்தான். ஏழெட்டு வயது ஒரு சிறுமி வீட்டு கதவின் வெளியே நின்று கொண்டிருந்தாள்.



"தன் மகள்!" இது வரை தன் மகளை பார்த்திருக்கவில்லை. அவன் மகள் தான் அவனை கூப்பிட்டிருக்கிறாள்!

அப்பா! திரும்பவும் அவள் கூப்பிட்டாள். அவளுடைய இளம்குரல் அவன் உள்ளத்தை இழுத்தது. அவன் கல் போல் அசையாமல் நின்றான்.
அப்போது செல்லம் உள்ளிருந்து வெளியே வந்தாள். "வாங்க, காபி ரெடியா இருக்குது."
வேலுசாமி அவர்களை நோக்கி நடந்தான்.





.