ராமிற்கு கவலையாக இருந்தது. இன்று தான் சுயம்வரம். அவன் குடும்பத்தில்
எல்லாருக்கும் அவனுடைய அம்மா, தங்கை, தம்பி எல்லோருக்கும் ஒரே டென்ஷன்! எல்லோரும்
அவனுக்கு உதவிசெய்வதில் முனைந்திருந்தார்கள்.
பழைய காலத்தில் இளவரசிகளுக்கு சுயம்வரம் வைப்பார்கள் இல்லையா? அரசகுமாரர்கள்
வரிசையாக அமர்ந்திருப்பார்கள். அரசகுமாரி ஒருவனை தேர்ந்தெடுத்து அவன் கழுத்தில்
மாலையிடுவாள் . இந்த காலகட்டத்தில் சுயம்வரம் திரும்பவும் வழக்கத்தில்
வந்துவிட்டது.
நேற்று அவனுடைய தங்கை கிருஷ்ணா அவனுடன் ஆண்கள் ப்யூட்டி பார்லருக்கு போய் அவனுடைய முகம் தலை முடி, கைகள், பாதங்கள்
எல்லாம் அழகுப் படுத்திக் கூட்டிக்கொண்டு வந்தாள். இப்போது உடை அணிவது மட்டும்
தான் பாக்கி. சூட்டா இல்லாவிட்டால், ஷெர்வாணி
குர்தாவா? கிருஷ்ணா ஷெர்வாணி குர்தாதான் என்று தீர்மானமாக சொன்னாள்.
ராம் உடை அணிந்து ரெடியாகி விட்டான். அவனுக்கு மனதில் ஆவலான எதிர்பார்ப்பு,
அதே சமயம் கொஞ்சம் அச்சமும் இருந்தன.
“அசல் மாப்பிள்ள மாதிரி இருக்கே” என்றாள் அவன் தாய் வாஞ்சையுடன். ராம் தன்னை
கொஞ்சம் திருப்தியுடன் பார்த்துக்கொண்டான்.
“அம்மா, நீ இல்லாட்டா கிருஷ்ணாவாவது என்னோட வந்தா நல்லா இருக்கும். கொஞ்சம்
தைரியமா இருக்கும்.” என்றான் அசட்டு சிரிப்புடன்.
“நல்லா தான் இருக்கும். ஆனா யாரும் கூட வரக்கூடாதுன்னு ரூல் இருக்கே, என்ன
பண்றது?”
ராமின் மனதில் சிந்தனைகள் ஓடின. “லேட்டாக போகக்கூடாது. 50 பேர்ல மூணு பேர்
தான் அழைக்கப் பட்டிருக்காங்க. வெற்றிங்கறது ஒரு நூலிழைல தான் தொங்கிட்டிருக்குது.
சரியான டயத்துக்கு போறது முக்கியம். இந்த வாட்டி வெற்றி அடையணும். எப்படியெல்லாம்
நடந்துக்கணும், பேசணும்னு கிருஷ்ணா அவளுடைய அனுபவத்திலிருந்து சொல்லி
கொடுத்திருக்கா. . இந்த வாட்டி வெற்றி நிச்சயம்.”
போன வருடம் தான் கிருஷ்ணா தனக்கு சுயம்வரம் நடத்தி தன் கணவனை
தேர்ந்தெடுத்திருந்தாள். அவளுடைய அனுபவம் கை கொடுத்தது.
டாக்ஸியில் அமர்ந்த அவன் அன்றைய செய்தித்தாளை பிரித்தான். பெரிய அச்சில், “ஆண் சிசுக்கள் வதை அதிகரிப்பு!
முதன்மந்திரி கவலை! வேண்டாத ஆண் குழந்தைகளை கொண்டு வந்து விட
ஆங்காங்கே தொட்டில்கள் வைக்க ஆணை!.”
தலைப்பு அவனைஅதிரவைக்கவில்லை. இந்த மாதிரி செய்திகள் சர்வசாதாரணமாகி விட்டன.
அவன் இடத்தை அடைந்த போது மற்ற இரண்டு பேரும் ஏற்கனவே வந்திருந்தார்கள். மூன்று
பேரும் ஒருவரை ஒருவர் போட்டி, பொறாமையுடன் பார்த்துக்கொண்டாலும் செயற்கையாக
புன்னகை செய்ய தவறவில்லை. அவர்களும் ஷெர்வாணி குர்தாஅணிந்திருந்தனர். மூன்று
பேரும் அசப்பில் ஒரே அச்சில் வார்த்தது போல இருந்தனர். மூன்று பேரும் நன்றாக டிரஸ்
செய்து ஆணழகர்களாக காட்சியளித்தனர்.
மூன்று பேர் கையிலும் ஒரே மாதிரி பை. ஸ்டார் சிங்கர் ரீயாலிடி ஷோ மாதிரி
மூன்று பேருக்கும் மதிப்பெண்கள் கொடுக்கப்பட்டிருந்தது. படிப்பு, வேலை, சம்பளம், ரசனைகள்,
தவிர வீட்டில் உதவி செய்ய ஒரு தாயோ, சகோதரியோ உண்டா இது போல நிறைய விஷயங்களுக்கு
மார்க் அளிக்கப் பட்டிருந்தது. இதற்காக விண்ணப்ப தாள்கள் நிரப்ப வேண்டியிருந்தது.
தங்கை கிருஷ்ணா தான் அவனுக்கு ஃபாரம்களை நிரப்ப உதவி செய்திருந்தாள்.
மூன்று பேருக்கும் சமமான மதிப்பெண்கள். அதனால் யார் தேர்ந்தெடுக்கபடுவார்?
ராமா, அல்லது மற்ற இருவரில் ஒருவரா? அவர்களை நம்பர் 2, நம்பர் 3 என்று
குறிப்பிடலாம்.
ராமிற்கு ஒரே கவலை! டயம் ஆக ஆக அவன் டென்ஷனும் அதிகரித்தது. இந்த சுயம்வரத்தில் வெற்றி அடையாவிட்டால் இந்த நகரத்தில் நடக்க இருக்கும்
இன்னொரு சுயம்வரத்திற்கு போக வேண்டி வரும். தொந்தரவு. மேலும் அது இரண்டாம் பட்சம்
தான்.
நேர்காணல் தொடங்கியது. ஒரு வரவேற்பு மேஜையில் அமர்ந்திருந்த ஒரு பெண் ஒவ்வொரு பெயராக கூப்பிட்டாள். அவர்களை
சோதனைக்குப்பிறகு ஒரு சௌகர்யமான அறைக்கு அழைத்துச் சென்றாள்.
அங்கே ஒரு சோபாவில் இளவரசி போல் கம்பீரமாக அமர்ந்திருந்தாள் ஒரு பெண். அவள்
தான் சுயம்வரம் நடத்தும் மங்கை. அவள் அவர்கள் மூவரையும் பார்த்து புன்னகை
செய்தாள். “உட்காருங்கள்” என்றாள் இனிய குரலில். மூவரும் ஹெட்மாஸ்டர் முன்
உட்காரத் தயங்கும் மாணவர்களைப் போல் தயக்கத்துடன் நாற்காலி நுனியில் அமர்ந்தனர்.
ஒரு பையன் மூவருக்கும் பழ ஜூஸ் கொண்டு வந்து கொடுத்தான்.
“வெல்கம். நீங்க மூணு பேருமே ஒரே மாதிரி மார்க் எடுத்திருக்கீங்க. அதனால உங்க
மூணு பேருக்கும் ஒரு டெஸ்ட் வைக்கப்போறேன்.”
இதுவும் வழக்கம் தான். பண்டைய காலத்து ராஜகுமாரிகள் மாதிரி இந்த காலத்தில்
பெண்கள் போட்டி வைப்பது சாதாரணமாகிவிட்டது.
அந்தப் பெண் மேலும் சொன்னாள், “அது ஒரு சமையல் போட்டி. என்ன சரியா?”
சரின்னு மூன்று பேரும் தலையாட்டினர்.
“நீங்க மூணு பேரும் வத்தக்குழம்பு பண்ணனும்.”
“வத்தக்குழம்பா?”
ராமிற்கு கொஞ்சம் உற்சாகம் ஏற்பட்டது. மற்ற இருவரும் அதிர்ந்தனர்.
“ஆமா. வத்தக்குழம்பு.”
“நான் சாம்பார் நல்லாசெய்வேன்” இது நம்பர் 1.
“வத்தக்குழம்பு வைக்கத்தெரியுமா?”
“என்னால கத்துக்க முடியும்.”
கொஞ்சம் இளப்பத்துடனும் இரக்கத்துடனும் அந்தப் பெண் அவனை பார்த்தாள்.
“நான் ரொட்டி, சப்ஜி எல்லாம் ரொம்ப நல்லா செய்வேன். நெறைய டிஷஸ் எனக்கு
தெரியும்” இது நம்பர் 2.
“அதெல்லாம் சரி. ஆனா போட்டி வத்தக்குழம்பு செய்யறது. பாட்டியெல்லாம்
செய்வாங்களே மண மணக்க, அந்த மாதிரி
வத்தகுழம்பு பண்ணத் தெரியுமா தெரியாதா?”
ராம், “எனக்குத் தெரியும். எங்கம்மா கத்துக்கொடுத்திருக்காங்க. வேணும்னா நான்
செஞ்சு காட்டறேன்” என்றான் அழுத்தம் திருத்தமாக.
அந்தப் பெண் அவனைப்பார்த்து புன்னகை செய்தாள்.
“ஓ! வெரி குட். வாங்க. சின்ன வெங்காயம், முருங்கைக்காய், பரங்கிக்காய்,
வெண்டைக்காய் எல்லாம் ரெடியா இருக்கு. வாங்க.”
அவனை சமையலறைக்கு அழைத்துச் சென்றாள். மற்ற இருவரும் தலையை
தொங்கப்போட்டுக்கொண்டு வெளியேறினர்.
யார் ஜெயிச்சாங்கன்னு சொல்லணுமா? ராமின் உள்ளம் சிறகடித்துக்கொண்டு ஆகாயத்தில்
பறந்தது.
“சடக்”கென்று விழித்துக்கொண்டான். அவன் அம்மா அவனை குலுக்கி ஆட்டி
எழுப்பிக்கொண்டிருந்தாள்.
“என்னடா தூக்கத்துல வத்தக்குழம்பு, வெங்காயம், வெண்டைக்கான்னு உளறிட்டிருக்கே?
சரியான தூங்குமூஞ்சி! இன்னிக்கு என்ன நாள், ஞாபகம் இருக்கா?”
“ஆங், சுயம்வரமா?”
“சுயம்வரமா, என்னடா உளர்றே? எந்திரிச்சு ரெடி பண்ணிக்கோ. “
“என்ன ட்ரெஸ்? ஷெர்வாணியா?”
“இதென்னடாது என்னன்னவோ சொல்றான்! இப்ப எதுக்கு ஷெர்வாணி கிர்வாணியெல்லாம்.
பேசாம பேன்ட் டீ-ஷைர்ட் போட்டுக்கோ. கல்யாணத்துக்கா போறோம்? பெண் வீட்டுக்காரங்கள
சந்திக்கப் போறோம். மறந்துட்டியா? பகல் கனவு கண்டுட்டு உளறிட்டிருக்கே.”
“ நீ கூட வருவியா, அம்மா?”
“பின்னே என்ன? நானு, அப்ப, தங்கச்சி எல்லாரும் தான் வருவோம்.”
”சுயம்வரம் எங்கம்மா நடக்குது?“
“ஐயய்யோ! இவனுக்கு என்னவோ ஆயிடுச்சு. சுயம்வரம் கியம்வரம் எல்லாம் ஒண்ணும்
இல்லை. அந்த ராஜகுமாரிக்கு நீ ஒருத்தன் தான் ராஜகுமாரன். நல்லா உளர்றே.
சுயம்வரமாம்! தூக்கத்துல எதோ கனவு கண்டிருக்கான்” அவன் அம்மா பெரிதாக சிரித்தாள்.
“போய் குளிச்சுட்டு வா. நான் காபி கொண்டுவரேன்”
எல்லாம் கனவா? ராமிற்கு தலை சுற்றியது. “நல்ல வேளை. 2016ல் இருக்கேன். 2076ல்
நான் இருக்க மாட்டேன். சரி, போய் நல்லா
குளிச்சு ஒரு காபி குடிச்சா ஃப்ரெஷ்
ஆயிடும். இல்லாட்டா எதாவது உளறிட்டே இருப்பேன்! அப்பா! கனவு நெஜம் மாதிரியே
இருந்திச்சு.” எழுந்து குளிக்கப் போனான்.
“