Thursday, February 12, 2015

ஒரு அன்னையின் லட்சியம் - அத்தியாயம் - 5

பிரகாசம் வி.எஸ். உயர்நிலைப் பள்ளியில் உயர் வகுப்புகளுக்கு கற்பிக்கும் ஒரு ஆசிரியர். அவரிடம் ஹெட்மாஸ்டருக்கு ரொம்ப மதிப்பு. ஆகையால் அவருடைய வேண்டுகோளை ஏற்று செல்வனுக்கு ஆறாம் வகுப்பில் இடம் தர சம்மதித்து விட்டார்.
வள்ளியுடன் பேசிய மறுநாள் அவளிடம் இந்த நற்செய்தியை தெரிவிக்க வேண்டுமென்று பிரகாசம் பள்ளி வராந்தாவில் சிறிது நேரம் காத்திருந்தார். அவர்கள் வராததால் சற்று நேரம் கழித்து தன் வகுப்பிற்கு பாடம் எடுக்க சென்றுவிட்டார்.
பிற்பகலில் பள்ளி முதல்வர் பியூன் மூலமாக பிரகாசத்தை விளித்தார்.
“நீங்கள் சிபாரிசு செய்த அந்தப் பையன் இன்னும் வந்து சேரல்லியே. வருவானா? ஏன்னா நிறைய பேர் சீட் கேட்டு வெயிட் பண்றாங்க.” என்று முதல்வர் பிரகாசத்திடம் கூறினார்.
பிரகாசம் ஒரு கணம் யோசித்தார். அவர் கண் முன் ஏழை வள்ளியின் முகமும் செல்வனின் துறுதுறுப்பான முகமும் தோன்றின. எதாவது கஷ்டம் நேர்ந்திருக்கும். எத்தனை ஆர்வமாக இருந்தாள் அந்தப் பெண்! நாளை நிச்சயம் வருவார்கள். பாவம்! சீட்டை விட்டுவிடக் கூடாது. நாளையும் வராவிட்டால் வேறு யாருக்காவது கொடுத்துவிட்டால் போகிறது. இவ்வாறு எண்ணிய பிரகாசம், “ஸார், நாளை வரை டயம் கொடுங்க. நாளைக்கு வந்துவிடுவாங்கன்னு நினைக்கறேன்.” என்றார்.
பிரகாசம் அந்த பள்ளியிலேயே மிகத் திறமையான ஆசிரியர் என்று பேர் எடுத்திருந்தார். பள்ளித்தலைவருக்கு அவரிடம் மிகவும் மதிப்பு. ஆகவே அவர் பிரகாசத்தின் வேண்டுகோளுக்கு இணங்கினார்.
பிரகாசம் யோசனையுடன் வெளியே வந்தார். அவருக்கு ஏன் இந்த ஏழைகளின் மேல் இவ்வளவு அக்கறை? அதற்கு காரணம் அவரே சிறு வயதில் ஏழ்மையில் கஷ்டப் பட்டவர். அவருடைய தாய் அவரை படிக்க வைக்க கஷ்டப்பட்டது கொஞ்ச நஞ்சமல்ல. அவள் அப்பளம் வடகம் இடுவாள். சிறுவன் பிரகாசம் அவற்றை விற்று வருவான்.


“அம்மா! ஒரு பாக்கட் அப்பளம் வாங்கிக்குங்க, அம்மா, நாளைக்கு எனக்கு ஃபீஸ் கட்டணும்.” என்று கெஞ்சி விற்பான். தாயை நினைத்துக் கொண்ட பிரகாசத்தின் உள்ளம் நெகிழ்ந்தது. வள்ளியைப் பார்த்ததும் அவருக்கு தன் தாயின் நினைவு தான் வந்தது. இருவருக்கும் ஒரே லட்சியம், குறிக்கோள்! தான் இப்போது நல்ல நிலைமையில் இருப்பதைப் பார்க்க அம்மா இல்லையே என்பது தான் அவருக்கு ஏக்கமாக இருந்தது.

மாலையில் அவர் வீடு திரும்பும் போது வள்ளி செல்வனுடன் வந்து கொண்டிருந்தாள்.
வள்ளி கையெடுத்து அவரை கும்பிட்டாள், உடனே செல்வனும் கும்பிட்டான்.
“அடே! நீங்களா? காலையில் ஏன் ஸ்கூலுக்கு வரல்ல? நான் காத்துகிட்டிருந்தேன்.” என்று விசாரித்தார் பிரகாசம்.
“வேண்டாங்க, செல்வனுக்கு நல்ல இஸ்கோல்ல படிக்க குடுத்து வைக்கல்ல. அவ்வளதான். உங்களுக்கு தான் ரொம்ப செரமம்.” என்று நிராசையான குரலில் கூறினாள் வள்ளி.
“என்ன விஷயம்? நேத்து உற்சாகமா இருந்தீங்க. என்ன ஆச்சு?” என்று அவர் அக்கறையுடன் கேட்கவும்,
“நேத்தைக்கு இஸ்கோல விட்டு போனேங்களா, பாருங்க, வழில ராமக்கா ஓடி வந்து, வள்ளீ ஒம்புருசன போலீஸ் புடிச்சிட்டு போயிட்டாங்கன்னு சொல்லிச்சுங்களா, நானும் சரின்னுபோட்டு கைல இருந்த பணத்த எடுத்துக்கிட்டு டேசனுக்கு ஒடிப் போனேனுங்க, அங்க போலீஸ்காரரு அவர வுடணும்னா ஒரேயடியா ஆயிரம் ரூவா கேட்டாருங்க. எங்கிட்ட இஸ்கோலுக்கு கட்டறதுக்கு வச்சிருந்த அறநூத்தி அம்பது ரூவா தான் இருந்திச்சு. ராமக்கா, பாவம் அம்பது ரூவா குடுத்துது. இந்தா, இத வாங்கிட்டு அவர விட்டா விடு, இல்லாட்டி போனா அவரு அங்கேயே கெடக்கட்டும்னு கண்டிசனா சொல்லி போட்டேன். அந்த எளுநூறு ரூவா முச்சூடையும் வாங்கிட்டு எம்புருசன விட்டாரு. கையில இருந்த பணம் முச்சூடும் தீர்ந்திடிச்சி. வேல செய்யற ரண்டு வீட்டிலயும் கேட்டு பார்த்துட்டேன். நூறு நூறு ருவா தான் குடுத்தாங்க. சொல்லுங்க சாமி, எப்படி பீஸு கட்டமுடியும்?”
மூச்சு விடாமல் தன் வழிப்படி நடந்ததை விவரித்தாள் வள்ளி.  பிரகாசத்தின் உள்ளம் நெகிழ்ந்தது. ஏழை பாமர ஜனங்களை போலீஸே ஏமாற்றினால்? இந்த ஏழையின் பணம் போனது போனது தான்.
“வள்ளியம்மா, இனிமேல் இப்படி நடந்தால் யாராவது விஷயம் தெரிஞ்சவங்க, படிச்சவங்கள கூட்டிட்டு போங்க. தெரிஞ்சுதா? போலீஸ்காரர் உங்ககிட்ட பணம் கேட்டது ரொம்ப தப்பு. அப்படியெல்லாம் கொடுக்கக் கூடாது. அது போகட்டும். எதற்காக முருகேசனை போலீஸ் அரஸ்ட் பண்ணினாங்க?”
“அதுங்களா, என் புருசன் பாவங்க, வெகுளிங்க. சீட்டாட்டத்த வேடிக்கை பார்த்துட்டு நின்னிருக்குது. சீட்டாட்டத்துல ஏதோ தகறாராயி, அடிதடில போய் முடிஞ்சிருக்கு. இவரு சண்டைய வெலக்க பார்த்திருக்காரு. அப்போ அங்க பக்கத்துல ஒரு வீட்லேயிருந்து போலீஸுக்கு ஃபோன் செய்திருக்காங்க. போலீஸ் உடனே வந்து எல்லோரையும் புடிச்சிட்டு போய்ட்டாங்க. இவர் என்ன சொல்லியும் கேக்காம இவரையும் புடிச்சிட்டு போய்ட்டாங்க.”
“அப்படியா, சரி... செல்வனுக்கு ஆறாவதுல எடம் கிடைச்சிருக்கு. இப்போ கட்ட வேண்டிய பணத்தை நான் கட்டிடறேன். செல்வனுக்கு ஸ்கூல் சம்பளம் கிடையாது. ஆனா அட்மிஷன், டெர்ம் ஃபீஸ்ன்னு ஒரு அறுநூத்தியம்பது ரூபா கட்டவேண்டியிருக்கும். அதை நான் கட்டிடறேன்.”
பிரகாசம் மேலும் புன்னகையுடன் கூறினார், “எனக்கு திருப்பித் தர அவசரப்பட வேண்டாம். மெதுவா கொடுத்தா போதும்.”
வள்ளியின் முகம் மலர்ந்தது.
“நல்லதுங்க, சாமி, ரொம்ப சந்தோசமுங்க. சாமி! உங்க வீட்ல ஏதாச்சும் வேலையிருந்தா சொல்லுங்க, நான் வந்து கிளீனா செஞ்சு தாரேன்.”
பிரகாசம் புன்னகை செய்தார். “நான் தனி ஆள். எனக்கு எதற்கு வேலையாள்? செல்வன் நல்லா படிக்கட்டும். அது தான் முக்கியம். செல்வா, நல்லா படிப்பியா?”

படிப்பேன் என்று தலையாட்டினான் செல்வன். பிரகாசம் அவனை தட்டிக் கொடுத்தார்.
நன்றியால் நிறைந்த உள்ளத்துடன் அவர் போவதை பார்த்துக் கொண்டிருந்தாள் வள்ளி.

No comments:

Post a Comment