Friday, February 20, 2015

ஒரு அன்னையின் லட்சியம் அத்தியாயம் - 6

வள்ளி செல்வனின் படிப்பிற்காக தன் உடலை ஓடாக்கி உழைத்தாள். மேலும் இரண்டு வீடுகளில் வேலை எடுத்துக் கொண்டாள். பள்ளியில் சம்பளம் இல்லை, புத்தகங்களும் கொடுத்துவிட்டார்கள். ஆனாலும் வேறு செலவுகள் நிறைய இருந்தன. பேனா, ஜாமட்ரி பாக்ஸ், நோட்டுகள் எல்லாம் வாங்க வேண்டியிருந்த்து. சீருடை, காலணி, போன்ற பெரிய செலவுகள் வள்ளியைத் திணர அடித்தன. கார்ப்பரேஷன் பள்ளியில் எல்லாமே இலவசம். ஆனால் வள்ளிக்கு தன் மகனை நல்ல பெயருள்ள இந்த பள்ளியில் படிக்க வைக்கவேண்டும் என்ற ஆசை. அவள் படிக்கவில்லை என்றாலும் நல்ல பள்ளியில் படிப்பது முக்கியம் என்று அவளுடைய உள்ளுணர்வு கூறியது.

முருகேசனிடமும் வள்ளி கண்டிப்பாக நடந்து கொண்டாள். செல்வன் ஒழுங்காக பள்ளிக்கு சென்றிருந்தால் வள்ளி தன் கஷ்டங்களை பொருட்படுத்தியிருக்க மாட்டாள். ஆனால் செல்வனுக்கு புதிய பள்ளி பிடிக்கவே இல்லை. பழைய பள்ளியில் பெரும்பான்மையான மாணவர்கள் செல்வனைப் போலவே வறுமை கோட்டிற்கு கீழே உள்ளவர்கள். சத்துணவிற்காகவே நிறைய பெற்றோர் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பினார்கள். படிக்க வைக்க வேண்டும் என்ற அக்கறை அவர்களுக்கு இருக்கவில்லை. ஆகையால் செல்வனுக்கு தன் நிலைமை வித்தியாசமாகத் தெரியவில்லை.

ஆனால் இப்போதோ? புதிய பள்ளியில் தலைமையாசிரியர் மிக கண்டிப்பானவர். எல்லாமே ஒழுங்காக நடந்தது. நிறைய பிள்ளைகள் படிப்பில் கவனம் செலுத்தினார்கள். அறக்கட்டளையின் கீழ் நடத்தப்பட்ட பள்ளியாதலால் ஏழை மாணவர்களும் கணிசமாக இருந்தனர். ஆனாலும்


பெரும்பான்மையான மாணவர்கள் செல்வனை விட அந்தஸ்தில் உயர்ந்தவர்கள். யாரும் அவனிடம் பழகவில்லை. அவனுக்கு பள்ளி ஒரு சிறை மாதிரி இருந்ததில் வியப்பில்லை.
அவனுடைய வகுப்பில் வள்ளி முன்பு வேலை செய்த வீட்டு எஜமானி காவேரியின் மகன் ராம்குமார் படித்தான். வேலைக்காரியின் மகன் தன்னுடன் சரிசமமாக படிப்பதாவது என்று ஆத்திரமாக வந்தது ராம்குமாருக்கு. அவன் மூலம் செல்வனின் தாய் பற்றுத் தேய்த்து பிழைக்கும் வேலைக்காரி என்பது வகுப்பில் அனைவருக்கும் தெரிந்துவிட்டது. ஒரு சிலரைத் தவிர மற்ற எல்லோரும் செல்வனை மட்டமாக நடத்தினர். ராம்குமாருக்கு செல்வனை மட்டம் தட்டுவதில் ஒரு குரூர திருப்தி. இதனாலெல்லாம் பள்ளிக்கு செல்வது வேப்பங்காயைப் போல் கசந்தது செல்வனுக்கு.

வாரத்தில் பாதி நாட்கள் வயிற்றுவலி என்று நடித்து பள்ளிக்குப் போகாமல் மட்டம் போட்டுவிடுவான். இல்லாவிட்டால் பள்ளிக்கு செல்வது போல் கிளம்பிவிட்டு எங்காவது தன் சேரி நண்பர்களுடன் கிரிக்கட் ஆடிக் கொண்டிருப்பான்.

ஒரு நாள் வயிற்றுவலி என்று சொல்லி பள்ளிக்குப் போகாமல் வள்ளி வேலைக்குப் போனவுடன் தன் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்ததை வள்ளி கண்டுபிடித்துவிட்டாள். அதற்கு முன் மாதப் பரிட்சையில் வேறு செல்வன் மிகக் குறைவாக மதிப்பெண்கள் வாங்கியிருந்தான். அதனால் வள்ளி அவனை நையப் புடைத்து விட்டாள்.
அன்றிலிருந்து செல்வனிடம் ஒரு மாற்றம் தெரிந்தது. தினமும் பள்ளிக்கு சென்றான். எப்போதும் படிக்க முயன்றான். மாலையில் கூட விளையாடப் போகாமல் புத்தகத்தை வைத்துக் கொண்டு அவன் உட்கார்ந்திருப்பதை பார்க்கும் போது அவன் தந்தை முருகேசனுக்கு பாவமாக இருக்கும். செல்வனை வருத்தி படிக்க வைப்பதில் முருகேசனுக்கு சிறிதும் இஷ்டமில்லை.

 “நம்ம சாதிக்கு சுட்டு போட்டாலும் படிப்பு வராது. வள்ளி. வெட்டி செலவு. சொன்னா ஒனக்கு ஏற்கமாட்டேங்குது. ஏதாவது வேலை கத்துகிட்டாலாவது புண்ணியம்” என்பான்.

சேரியில் அனைவரும் முருகேசன் கட்சி. வள்ளி மாத்திரம் தனி. ஏதோ அவள் செல்வனை சித்திரவதை செய்வதாக அனைவரும் பரிதாபப் பட்டனர். இந்த சமயத்தில் அரைவருடத்தேர்வு நெருங்கி வந்தது.

No comments:

Post a Comment