Saturday, March 7, 2015

ஒரு அன்னையின் லட்சியம் - அத்தியாயம் 8

   இரண்டு வருஷங்கள் ஓடோடிவிட்டன. செல்வன் எட்டாவது வகுப்பை எட்டிவிட்டான். உயரமாக வளர்ந்துவிட்டான். இப்போது செல்வனின் குடிசையில் ஒரு தூளி தொங்கியது. மணிமேகலை பிறந்து ஒரு வருடமாகிவிட்டது.
  அன்று வழக்கம் போல் வள்ளி ‘மணி’யை இடுப்பில் தூக்கிக்கொண்டு வேலைக்குக் கிளம்பினாள். வழியில் ராம்குமாரும் அவன் தாய் காவேரியும் சென்று கொண்டிருந்தனர். வள்ளி செல்வன் நன்றாக படிப்பதையும், அவன் எதிர்காலத்தைப் பற்றியும் சிந்தனையில் ஆழ்ந்திருந்ததால் அவர்களை கவனிக்கவில்லை.
   ராம்குமார், “அம்மா, வள்ளி போறாம்மா.” என்றான்.
“போகட்டுமே, ராங்கிக்காரி.” என்று காவேரி கழுத்தை நொடித்தாள்.
“அம்மா, தெரியுமா அந்த செல்வன் இருக்கானே, அவன் தான்  இப்ப க்ளாஸ்ல ஃபர்ஸ்ட் ரேங்க்.”
  காவேரி திடுக்கிட்டாள்.
“என்ன? என்னடா சொன்னே?”
  “ஆமாம்மா, செல்வன் தான் க்ளாஸ்ல ஃபர்ஸ்ட். க்ளாஸ் மானிட்டர் கூட. எனக்கு அவனைக் கண்டாலே பிடிக்கல, அம்மா. டர்டி கூஸ்!” என்றான் ராம்குமார் ஆத்திரத்துடன்.
  “அது எப்படிடா? அவன் சரியான மக்குப் பிளாஸ்திரியாச்சே?”
 “அது வந்தும்மா, ஸ்கூல்ல பிரகாசம் ஸார் இருக்காரே, அவர் அவனுக்கு பாடம் சொல்லி குடுக்கிறார்”
“அவர் பெரிய கிளாஸுக்கு சொல்லிக் குடுக்கறாருன்னு நெனச்சேன்?”
“ஆமாம்மா, அவர் நைன்த், டென்த்துக்கு தான் எடுப்பாரு, ஆனா செல்வன் அவர் வீட்ல வேல செய்யறான், அவர் பதிலுக்கு அவனுக்கு பாடம் எடுக்கறாரு. அவர் வேற யாருக்கும் டியூஷன் எடுக்கறதில்ல.”
ஆம். பிரகாசத்தின் தன்னலமற்ற செயலை உலகம் அப்படித் தான் கணித்தது.
காவேரிக்கு ஆத்திரமாக வந்தது. ஒரு சாதாரண வேலைக்காரி, அதுவும் மஹாராங்கிக்காரி, தன்னுடன் சண்டை போட்ட வள்ளியின் பையன் தன் செல்வ மகனை படிப்பில் முந்துவதாவது?
அன்று மாலையே ராம்குமாரை விரட்டி செல்வனின் தந்தை முருகேசனை அழைத்து வரச் செய்தாள்.
முருகேசன் வந்து மரியாதையுடன், “கூப்பிட்டீங்களாம், குமார் வந்து சொல்லிச்சு,” என்றான்.
“ஆமா, முருகேசா, எப்படி இருக்கே, இன்னம் அந்த ராவ் வீட்ல தான் வேல பாக்கறயா?” என்று கரிசனத்துடன் நலம் விசாரித்தாள் காவேரி.
 “ஆமாம்மா, நல்லா இருக்கேன், அம்மா” என்றான் முருகேசன் வினயமாக.
“இன்னைக்கு வீட்ல விசேஷம், பூஜை. அப்பம் வடை நிறைய இருக்கு. அத உனக்கு குடுக்கலாம்னு கூப்பிட சொன்னேன். இந்தா, கொண்டு போய் எல்லாரும் சாப்பிடுங்க.” என்று அவனிடம் காவேரி ஒரு பொட்டலத்தைக் கொடுத்தாள்.
முருகேசன் அதை வாங்கிக்கொண்டு போகத் திரும்பினான்.
“ம்ம்.. முருகேசா, இன்னும் ஏதோ உங்கிட்ட கேக்கணும்னு இருந்தேன். மறந்துட்டேன், பாரு. ஆ.. உன் பையன்.. அவன் பேரு..”
“செல்வன், அம்மா”
“ஆமாம், செல்வன், நல்லா வளர்ந்திருப்பானே, வேலைக்கு எதாவது போறானா? அவன் இப்ப என்ன செய்யறான்?” என்று கரிசனம் வழியும் குரலில் காவேரி வினவினாள்.
“இல்லீங்க, இஸ்கோலுக்கு போறாங்க, எட்டாங்கிளாஸ்.” கொஞ்சம் பெருமையுடன் சொன்னான் முருகேசன்.
காவேரி சூள் கொட்டினாள்.
“ஆமா, போ, அவன் படிச்சு என்ன கிழிக்கப் போறான்? நாலு காசு சம்பாதிச்சா உனக்கு உதவியா இருக்கும், இல்லையா? பாரு, நம்ப செட்டியார் கடை இருக்கே, மளிகைக் கடை, அங்க அவருக்கு கடைல வேலை செய்ய ஒரு பையன் வேணுமாம். சொன்னாரு. உன்ன இப்ப பார்த்த உடன எனக்கு அது  ஞாபகம் வந்துது. ஒனக்கு ஒருபையன் இருக்கானே, சொன்னா ஒனக்கு உபயோகமா இருக்குமேன்னு தோணித்து. மொதல்ல 600 ரூபா கொடுப்பாராம். போகப் போக ஜாஸ்தி கொடுப்பாராம். சொன்னார். நல்ல வேல. என்ன? அனுப்பறியா? நான் சொன்னா எடுத்துப்பாரு.”
தலையை சொறிந்தான் முருகேசன்.
“என்ன? பேசாம நிக்கறே? நான் சொல்றத கேளு. அவன கடை வேலைக்கு நாளைலேருந்து அனுப்பறே, என்ன?”
“இல்லைங்க, இந்த வள்ளி என்ன சொல்லுமோ, அதான் ரோசனையாயிருக்குது.”
“ஓ, உன் வீட்ல வள்ளி வச்சது தான் சட்டம், இல்லே? அத நான் மறந்தே போயிட்டேன்” என்றாள் காவேரி ஏகத்தாளமாக. முருகேசனின் ஆண்மை வீரிட்டெழுந்தது.
“ஊம்.. அதெல்லாம் ஒண்ணும் இல்லீங்க, பொம்பள சொன்னா யாரு கேப்பாங்க? என்றான் வீறாப்பாக.
“பின்னே என்ன, செல்வனை அனுப்பு. நீ நம்ப ஆளாச்சேன்னு தான் நான் சொன்னேன். என்ன? அனுப்பறியா?” என்று காவேரி அதிகாரக் குரலில் வற்புறுத்தவும் “நல்லதுங்க” என்று சொல்லிவிட்டு முருகேசன் வீட்டிற்கு திரும்பினான்.
 வழியில் மணிமேகலையை தூக்கிக் கொண்டு வந்துகொண்டிருந்த வள்ளியை சந்தித்தான். மணியை வாங்கி அதன் இரு கன்னங்களிலும் மாறி மாறி முத்தமிட்டான். பிறகு வள்ளியிடம் காவேரி சொன்ன விஷயத்தை சொன்னான்.
“நல்ல வேல, வள்ளி, நமக்கும் இப்ப செலவு சாஸ்தியா இருக்குது. நம்ம பையன் அதிர்ஸ்டம் கெடச்சிருக்கு, நாளைக்கே அனுப்பிவைக்கறேன்னு சொல்லிபோட்டேன்.” என்றான் முருகன் உற்சாகமாக.
அவன் பேச்சைக் கேட்க கேட்க வள்ளியின் இரத்தம் சூடேறியது.
“ஒனக்கு ஏதாச்சும் பயித்தியம் பிடிச்சிருச்சா?” என்று கேட்டாள் ஆத்திரத்துடன்.
“நீ எப்பவும் ராணி மாதிரி ஆடரு போடலாம்னு நெனைக்காதே. செல்வன் எனக்கும் தான் மகன். நான் அவன வேலக்கு அனுப்பத்தான் போறேன்.” என்றான் முருகேசன் கண்டிப்பாக.
வள்ளிக்கு அதிக கோபம் வந்தால் பேசவே மாட்டாள். பேசாமல் நடந்தாள்.

No comments:

Post a Comment