ஒரு நாள் முருகேசன் மீது
ஒரு பைக் மோதி விழுந்து விட்டான். இடது காலில் அடி பட்டுவிட்டது. ஒரு முறை
ஆஸ்பத்திரிக்குப் போய் கட்டு போட்டுக் கொண்டு வந்தான்.
வலி
கொஞ்சம் குறைந்தவுடன் வேலைக்கு போக ஆரம்பித்து விட்டான். சுமார் பத்து நாட்கள்
கழித்து மீண்டும் வலி தொடங்கியது. முருகேசன் ஆரம்பத்தில் அசட்டையாக இருந்தான்.
வலியை பொறுத்துக் கொண்டே வேலை செய்தான். வர வர வலி அதிகமாகியது. திடீரென்று ஒரு நாள் காலையில் எழுந்திருக்கவே
முடியவில்லை. இடது கால் பாறாங்கல் மாதிரி கனத்தது.
“ஐயோ!
வள்ளி! வலிக்குதே! அம்மா! தாங்க முடியல்லியே!” என்று அவன் அனத்தவே வள்ளி எழுந்து
அவனை தொட்டு பார்த்தாள். காய்ச்சலில் உடல் அனலாக கொதித்தது. செல்வன் ஓடிப்போய்
ஆட்டோ கொண்டுவந்தான். வள்ளி முருகேசனை ஆஸ்பத்திரிக்கு கூட்டிக்கொண்டு போனாள். ஒரு
மாதம் ஆஸ்பத்திரியில் இருந்தான். வீட்டிற்கு திரும்பி வரும்போது முருகேசனுக்கு
இடது முழங்காலுக்கு கீழே மூளியாக இருந்தது. முருகேசன் நொண்டியாகிவிட்டான்.
வள்ளிக்கு
சோதனைக்கு மேல் சோதனையாக வந்தது. வந்த வருமானம் இரண்டு வேளை சாப்பாட்டிற்கே
போதவில்லை. ஆஸ்பத்திரி, மருந்து என்று வேறு செலவு எக்கச்சக்கமாக ஆகிவிட்டது. நல்லவேளையாக
செல்வனுக்கு ஸ்காலர்ஷிப் இருந்தது. அவன் படிப்பு செலவு முழுவதும் அதில்
அடங்கிவிட்டது. எப்படியோ இடர்களுக்கும் நடுவில் செல்வன் பத்தாவதை எட்டிவிட்டான்.
ஒரு நாள்
பள்ளியில் மதியம் உணவிற்கு மணி அடித்தது. செல்வன் தன் டிபன்பாக்ஸை எடுத்துக்
கொண்டு வழக்கம் போல் மரத்தடிக்கு சென்றான். அங்கு ரமணி, செல்வனின் நெருங்கிய
நண்பன் வந்து சேர்ந்து கொன்டான். அந்த பள்ளியில் செல்வன் சேர்ந்த புதிதில் அவனை
எல்லோரும் இளக்காரமாக நடத்தினார்கள். ஆனால் ரமணி மட்டும் அவனிடம் அப்போதும் நட்புடன் நடந்து கொண்டான். வெகு
விரைவிலேயே இருவரும் இணைபிரியாத நண்பர்களாகி விட்டார்கள். ரமணி எப்போதும்
ஜோக்கடித்துக் கொண்டே இருப்பான். அவன் இருக்கும் இடம் எப்போதும் கலகலப்பாக
இருக்கும். எல்லோரையும் சிரிக்க வைத்துக்
கொண்டே இருப்பான்.
ரமணி
பள்ளியின் சிறந்த விளையாட்டு வீரன். படிப்பில் சுமார் தான். அவனுடைய கலகலப்பான
சுபாவத்திற்கு நேர் எதிரிடையாக செல்வன் எப்போதும் சீரியஸாக இருப்பான். ஒரே வகுப்பு
என்றாலும் செல்வன் ஏ பிரிவிலும் ரமணி பி பிரிவிலும் இருந்தனர். அன்று செல்வன்
முகம் வாடியிருந்தது. ரமணி தன் சுபாவப்படி கலகலவென்று பேசி செல்வனுடைய மூடை மாற்ற
முயற்சித்தான்.
“செல்வா,
இன்னைக்கு தமிழ் பீரியட்ல என்ன நடந்திச்சு தெரியுமா? ஒரே தமாஷ். எங்க பென்ச்
ஓரத்துல நம்ம குண்டு ஹரி உக்கார்ந்திருந்தானா, நாங்க எல்லாரும் சேர்ந்து அவன புஷ்
பண்னினோமா, அவன் தடால்லுன்னு அந்த ஸைடில விழுந்தானா, ஸார் கோபத்தோட வந்தாரா, அப்ப
ஹரி ஒரு நல்ல ஐடியா பண்னினான், மயக்கம் வந்த மாதிரி கண்ண சொருகிட்டு நடிச்சானா,
ஸார் அப்படியே நம்பிட்டாரு. “ஏண்டா, ஒடம்பு சரியா இல்லையா? போ. போய் கடைசி பென்ச்ல
போய் படுத்துக்கோ.” அப்படீன்னாரு, அவனும் ஜாலிய பீரியட் முழுக்க சுகம்மா
படுத்துக்கிட்டான்” என்று ரமணி சிரித்தான்.
‘செல்வன் முகத்தில் சிரிப்பில்லை.
“அப்புறம்
செல்வா, சயன்ஸ் பீரியட்ல நம்ம நாகேஷ் இல்லே, அவன் சள சளன்னு பேசிக்கிட்டே
இருந்தானா. ஸார் பாத்துட்டாரு. அடிக்க வந்தாரா? அப்ப நாகேஷ் ஸாரப் பாத்து
சொல்றான், “ஸார், என்ன அடிக்காதீங்க, ஸார்” அப்படீன்னு பலம்மா சொன்னானே
பார்க்கணும், ஸார் ஷாக்காயிட்டாரு, “ஏண்டா உன்ன அடிக்கக்கூடாது?”ன்னு கேட்டார்.
“ஸார், நீங்க அடிச்சா நான் அழுவேன், ஸார்” ன்னு சொன்னானே பார்க்கணும், க்ளாஸ்ல ஒரே
சிரிப்பு, ஸாரும் சிரிச்சுட்டாரு.” என்று பலமாக சிரித்தான் ரமணி.
செல்வன்
சிரிக்க முயன்றான். ஆனால் அவன் சிரிப்பில் உயிர் இல்லை.
“ரமணி,
எங்கம்மா சீக்கா இருக்காங்க. ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போயிருக்காங்க. எனக்கு ஒரே
பயம்மா இருக்குது, ரமணி.” என்றான் செல்வன் துக்கத்தால் தடைபட்ட குரலில்.
ரமணிக்கு
அவனை பார்க்க பாவமாக இருந்தது.
“செல்வா, கவலைப் படாதே.
அவங்களுக்கு சரியாயிடும்.” என்று நண்பனை தேற்ற முயன்றான்.
“இல்லே, ரமணி, அம்மாவுக்கு
கொஞ்ச நாளாவே, மணி பொறந்த பிறகே உடல்நிலை சரியா இல்ல. சத்தான உணவு இல்லாததால்
இருக்கலாம். என் படிப்புக்காக தன்ன ரொம்ப கஷ்டப்படுத்திக்கறாங்க. ரொம்ப
உழைக்கறாங்க. எங்கப்பாவுக்கு கால் போனதிலிருந்து அம்மா தான் அவர் வேலை செய்யற
வீட்டிலும் போய் செய்யறாங்க.
அங்க எங்கப்பாவுக்கு
தோட்டம், மாடுங்கள பராமரிக்கிற வேலை. நல்ல சம்பளம். அதனால அந்த வேலைய விட
முடியல்ல. அந்த வீட்டுக்காரங்க நல்லவங்க.
எங்கப்பா மெதுவா உக்கார்ந்து பாலை கறந்து கொடுத்திருவாரு. மெதுவா தன்னால
முடிஞ்சதை செய்வாரு. ஆனா மத்த வேலைகள
அம்மா தான் செய்யணும்.”
ரமணி அனுதாபத்துடன் அவன்
சொல்வதை கேட்டுக் கொண்டிருந்தான்.
“வீக்கா இருந்தாலும்
உழைச்சுக்கிட்டே இருப்பாங்க. ஆனா நேத்தைக்கு திடீர்னு வயத்தில தாங்க முடியாம வலி
வந்திருச்சு. டாக்டரம்மா கான்ஸரா இருக்கல்லாம், எதுக்கும் டெஸ்ட் பண்ணிடலாம்
சொல்றாங்க. எனக்கு.... பயம்மா இருக்கு, ரமணி. என்று கூறிய செல்வன் விம்மி அழுதான்.
ரமணி செல்வனின் தோள்களை
ஆதரவுடன் அணைத்துக் கொண்டான்.
“செல்வா, கவலைப்
படாதே. சாயங்காலம் நாம கோவிலுக்குப் போய்
சாமி கிட்ட வேண்டிக்கலாம். உன் அம்மாவுக்கு சரியாயிடும். வா. பெல் அடிச்சிருச்சு.”
என்று சொல்லி நண்பனை அன்புடன் அழைத்துச் சென்றான்.
No comments:
Post a Comment